சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரிய மறையார், பிறையார், மலை பண் - காந்தாரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5DoV13VV7ys |
5.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழை கொள் காதினர், கோவண பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Mr5xSIsFphI |
7.053
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மரு ஆர் கொன்றை மதி பண் - பழம்பஞ்சுரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hftdKQrF0JI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.080  
வரிய மறையார், பிறையார், மலை
பண் - காந்தாரம் (திருத்தலம் திருக்கடவூர் மயானம் ; (திருத்தலம் அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார், கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்; பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே | [1] |
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக் கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்; செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார், அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே | [2] |
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி, காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்; பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார், ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே | [3] |
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார், மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின் மிசையார் கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்; பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே | [4] |
வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத் துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள் துளங்கக் கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்; பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே | [5] |
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார், ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார் கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம் அமர்ந்தார்; பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே | [6] |
பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார், ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்; காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்; பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே | [7] |
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால் கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்; மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல் பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே | [8] |
வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார், கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்; திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப் பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே | [9] |
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள் காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்; தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர், பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே | [10] |
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த, அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப் பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை, இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.038  
குழை கொள் காதினர், கோவண
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கடவூர் மயானம் ; (திருத்தலம் அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
குழை கொள் காதினர், கோவண ஆடையர், உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்; பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே. | [1] |
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்; தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னை என்னார், பெருமான் அடிகளே. | [2] |
சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர், ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர், காலகாலர்-கடவூர் மயானத்தார்; மாலை மார்பர், பெருமான் அடிகளே. | [3] |
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல் மறவனார்-கடவூரின் மயானத்தார்; அறவனார், அடியார் அடியார் தங்கள் பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே. | [4] |
கத்து காளி கதம் தணிவித்தவர், மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்; ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு பித்தர்காணும், பெருமான் அடிகளே. | [5] |
எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர், கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்; அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்; பெரியர்காணும், பெருமான் அடிகளே. | [6] |
அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்; வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும் பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே. | [7] |
அரவு கையினர், ஆதி புராணனார்- மரவு சேர் கடவூரின் மயானத்தார்; பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர், பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே. | [8] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.053  
மரு ஆர் கொன்றை மதி
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருக்கடவூர் மயானம் ; (திருத்தலம் அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ; திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [1] |
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்; கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்; எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம், பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [2] |
காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்; தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்; பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [3] |
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்; பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [4] |
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக, மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்; பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [5] |
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து, பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த் திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்; பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [6] |
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்; தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்; ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்; பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [7] |
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க் கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து, நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய் பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [8] |
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்; ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்; ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்; பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. | [9] |
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து, பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள் பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே. | [10] |